இலங்கையை பொறிக்குள் சிக்க வைப்பதற்கு முயற்சி-விமல்

109 0

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ´உத்தர லங்கா சபாகய´வின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

´உத்தர லங்கா சபாகய´வின் நுவரெலியா மாவட்ட மக்கள் சந்திப்பு ஹங்குராங்கெத்தையில் நேற்று (27) நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச கூறியவை வருமாறு,

” இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதனை வைத்து பலம்பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கி பிடிக்க முற்படுகின்றன. தமது உபாயத்துக்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன. ´ஹெட்டி´யில் போன்று இலங்கையிலும் ஆட்சி கட்டமைப்பு இல்லாத நிலைமையை தோற்றுவித்து, நாட்டை சீரழிக்க முற்படுகின்றன. இதற்காக ´என்ஜீஓ´ காரர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் எனக் கூறுவது இந்த நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும் என்றார்.