காணி சுவீகரிப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் போர்க்கொடி!

108 0

வடக்கில் முப்படைகளுக்கும் காணிகளைத் தாரைவார்க்கும் ஆளுநரின் முயற்சியைக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆளுநரின் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இந்தச் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றது.

சர்வதேச மட்டத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகப் போலியான தோற்றப்பாட்டைக் காட்டுவதற்கு ஜனாதிபதி நாடாளுமன்றில் பேச்சுக்கு அழைத்துக் கொண்டு அதேசமயம் அவருடைய தூதுவராக இருக்கக் கூடிய வடக்கு, கிழக்கு ஆளுநர்களை கொண்டு காணி சுவீகரிப்பு என்ற விடயத்தை மிகவும் நாசூக்காக செய்கின்ற உண்மை முகம் இப்போது அம்பலமாகியுள்ளது.

எம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சு என்ற போலி முகம் இப்படிப்பட்ட செயற்பாடுகள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் என நம்புகின்றோம். இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் போராட்டங்களை நடத்துவோம் என கூறியுள்ளார்.