விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பிரயோகம் செய்யப்படவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி கொத்தணி குண்டு போன்ற பாரதூரமான ஆயுதங்கள் எம்மிடம் இருக்கவும் இல்லை. விமானப் படை அதனை பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை.
கொத்தணி குண்டுகளை யுத்தத்தில் பிரயோகத்தாக கூறுவது மாயையாகும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போர் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க கூடாது. அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை. மாறாக உள்ளக விசாரணையின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரை வரவழைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைச்சிற்கான கட்டடத்தை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார். இதன்பின்னர் தனது கடமைகளை அமைச்சர் சரத் பொன்சேகா பொறுபேற்றார். இந்நிகழ்விற்கு அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதன் பின்னரே ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
அங்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிடுகையில்,பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் இலகஙக கிராமிய அபிவிருத்தி யாக இருந்தாலும் உட்கட்டமைப்பு திட்டங்களை நாம் முன்னெடுக்க போவதில்லை. அதற்கு மாறாக விவசாயத்துறை மேம்படுத்தல், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உற்பத்தி துறையை வலுப்படுத்தல், வாகனங்ள் மற்றும் தொலைபேசி போன்ற புதிய உற்பத்திகளை ஏற்படுத்தல் , முதலீட்டாளர்களை கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பதே எமது கடமையாகவுள்ளது.
எனது அமைச்சுக்கான ஏற்பாடுகளையும் சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதன் பின்னரே எமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் . ஆனாலும் ஐந்து வருட பூர்த்தியில் பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவே எமது இலக்காகும்.
வடமேல், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு அபிவிருத்தி என்னிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெகா பொலிஸ் திட்டத்தின் பிரகாரம் குறித்த மாகாணங்களில் அபிவிருத்தி முன்னெடுக்க உள்ளோம்.மோசடிகளுக்கு இடமில்லைபுதிதாக நிறுவப்பட்ட பிராந்திய அமைச்சில் ஏனைய அமைச்சுக்களை போன்று ஊழல் இடம்பெறாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். அரச ஊழியர் ஒழுங்கு முறைமையின் பிரகாரமும் சுற்றறிக்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டும்.
சர்வதேச நீதிபதிகள் விவகாரம்
போர் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் போர் குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிப்பதற்கு எமது அரசியலமைப்பில் எவ்வித அனுமதியும் கிடையாது. ஆகையால் உள்ளக விசாரணை செயற்த்திட்டத்தின் போது சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க கூடாது. எனினும் அதற்கு மாறாக உள்ளக விசாரணையின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களை வரவழைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது.
இலங்கையில் இதற்கு முன்னரான காலப்பகுதியின் போது பலதரப்பட்ட விசாரணைகளுக்கு சர்வதேச பங்களிப்புகள் பெறப்பட்டுள்ளன.
கொத்தணி குண்டு
விடுதலை புலிகளுக்கு எதிராக யுத்ததின் போது கொத்தணி குண்டு பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வருகின்றது. ஈது தொடர்பில் சர்வதேச அளவில் பெருமளவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் என்ற வகையில் கொத்தணி குண்டுகளை நாம் ஒருபோதும் பிரயோகம் செய்யவில்லை என்பதனை கூறுகின்றேன். அதற்கான தேவையும் எமக்கு இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி கொத்தணி குண்டு போன்ற பாரதூரமான ஆயுதங்கள் எம்மிடம் இருக்கவும் இல்லை. அதேபோன்று விமான படையும் அதனை பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை. கொத்தணி குண்டு பிரயோகித்தாக கூறப்படுவது வெறும் மாயையாகும்.
நிழல் அமைச்சரவை
தேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுக்களை அவதானிக்கும் முகமாக நிழல் அமைச்சரவை நிறுவப்பட்டுள்ளது. எனவே முதலில் நிழல் அமைச்சரவையை பரிசுத்தப்படுத்த வேண்டும். அந்த அமைச்சரவையில் முழுமையாக மோசடியாளர்களே உள்ளனர் என்றார்.