அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் வழங்கினார் சி.வி.சண்முகம்

163 0

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இந்த நகல்களையும், பொதுக்குழு தீர்மானங்களையும் உடனடியாக எடப்பாடி பழனிசாமி இ-மெயில் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார். 2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார். வக்கீல்கள் பாலமுருகன், பிரேம்குமார், வினோத் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் பேட்டி அளித்த அவரிடம் உங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். பொன்னையன் தொடர்பான ஆடியோ பற்றி கேட்டதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.