ஜனாதிபதி சென்றால் பிரதமரே அடுத்த ஜனாதிபதி

136 0

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்ததன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரே ஜனாதிபதியாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே மக்களினதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினதும் பொதுவான கருத்து என்றும் அவர் வெளியேறுவாரா என்பது தங்களுக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்காக ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சபாநாயகருக்கும் அரசாங்கத்தில் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி  கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புக்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை அமைதியான நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தாமதித்தால் நாடு நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.