பிரதமர் வீட்டிற்கருகில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் -விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி

178 0

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இடையே, ஊடக நடவடிக்கைகளுக்காக சென்ற சிரச, சக்தி ரி.வி. ஊடகவியலாளர்கள் நால்வர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன்பாக வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவலவிடம் அறிக்கை ஊடாக விடயங்களை முன் வைத்த நிலையில், ; விசாரணைகளுக்கான உத்தரவுகளையும் பெற்றுக்கொண்டனர்.

அதன்படி குறித்த தாக்குதல் தொடர்பிலான செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை விசாரணையாளர்களுக்கு வழங்குமாறு நீதிவான் ஹர்ஷன கெக்குனவல அனைத்து ஊடகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி இரவு வேளையில், பிரதமரின் இல்லத்தை அண்மித்த பதற்ற நிலை தொடர்பில் தகவல் சேகரிக்க சென்ற சிரச ;தொலைக்காட்சியின் வீடியோ படப் பிடிப்பாளர் வருன சம்பத், ; அலுவலக செய்தியாளர் சரசி பீரிஸ், இணைய ஊடகவியலாளர்  ஜன்னித்த மெண்டிஸ் சக்தி ரி.வி. ; ஊடகவியலாளர் சிந்துஜன் உள்ளிட்டோர் அங்கு கடமையில் இருந்த பொலிஸாரால் தாக்கப்பட்டிருந்தனர்

;இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலின் போது அதில் பங்கேற்ற அங்கிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படைக்கு கட்டளை அதிகாரியாக செயற்பட்டதாக கூறப்படும் ரொமேஷ் லியனகே தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.