கொட்டாவ பகுதியில் எரிவாயு வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

117 0

எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக கொட்டாவ பஸ் நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டாவ பகுதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ பெரேரா என்ற மின் பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் இன்று (12) காலை கொட்டாவ நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரதான பஸ் நிலையத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்திற்கு தனது மகனுடன் சென்றதாக கூறப்படுகிறது.

அதற்காக ஏராளமானோர் வந்து வரிசையில் காத்திருந்த நிலையில், உயிரிழந்த நபரும் காரில் வந்து எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்தார்.

இதன்போது குறித்த நபர் திடீரென சுகவீனமுற்றதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.