38 கிலோ ஹெரோயினுடன் தாயும் மகனும் கைது

187 0

இரத்தினபுரி – எம்பிலிபிட்டி பிரதேசத்தில் 38 கிலோ ஹெரோயினுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

திங்கட்கிழமை (12) எம்பிலிபிட்டி பொலிஸாரினால் 38 கிலோ 360 கிராம் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஹெரோயின் தொகை குறித்த நகரத்தில் உள்ள இரண்டாம் வீதி , டெலிகொம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்ட வீட்டிலிருந்த 46 வயதுடைய பெண்ணொருவரும் , குறித்த பெண்ணின் மகனான 22 இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆடை மற்றும் பை தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவதாகக் கூறியே இவர்கள் இவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரர் ஒருவரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார் என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை முன்னெடுக்கும் நபரது வழிகாட்டலிலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காணப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை அளவிடப்பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தராசொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறிவதற்காக எம்பிலிபிட்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.