இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான செய்தியை மறுக்கும் இந்தியா

111 0

இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகச் செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் ஊகச் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது. இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்திய அரசாங்கம் இல்லை.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மதிப்புகள், அதன்படி நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளார் என்று குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பகிர்ந்திருந்தார்

அதில் ;கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும் ?

அப்படியானால் நமது அயலவனாக உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்ஷவினர் கோரும் போது நாங்கள் வழங்கத் தயார் என்று சுப்பிரமணியன் சுவாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்திய பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தே ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.