அமெரிக்க கோடீஸ்வர பெண்கள் பட்டியல்: இடம் பிடித்த 5 இந்திய பெண்கள்

132 0

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால் 15வது இடத்தினை பிடித்துள்ளார்.

சின்டெல்லின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி 24வது இடத்தை பிடித்துள்ளார். நேஹா நர்கடே, கன்ஃப்ளூயண்ட்டின் இணை நிறுவனர் 57வது இடம் பிடித்துள்ளார்.இந்திரா நூயி, பெப்சிகோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி 85வது இடத்தில் உள்ளார். ரேஷ்மா ஷெட்டி, ஜிகோ பயோவொர்க்ஸின் இணை நிறுவனர் 97வது இடத்திலும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்களில் ஒருவரான ஜெயஸ்ரீ லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் ஆவார். சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை படித்துள்ளார்.

அதன்பின் அமெரிக்கா சென்ற ஜெயஸ்ரீ அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியானார். 61 வயதான ஜெயஸ்ரீ போர்ப்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

போர்ப்ஸ் பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நீரஜா சேத்தி 24வது இடத்தில் உள்ளார். நீரஜா சேத்தி சின்டெல்லின் இணை நிறுவனராக உள்ளார். அவர் 1980 ஆம் ஆண்டு வெறும் 2,000 டாலர் முதலீட்டில் தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து ஐடி ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டெல்லை நிறுவினார்.

கிளவுட் நிறுவனமான கன்ப்ளூயண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா நர்கடே இந்தப் பட்டியலில் 57வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர்களாகும்.

பெப்ஸிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி 320 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 85வது இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸின் அமெரிக்காவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ஜிங்கோ பயோவொர்க்ஸின் ரேஷ்மா ஷெட்டியும் இடம் பெற்றுள்ளார். 41 வயதான இவருடைய சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர்களாகும்.