சென்னை விமான நிலைய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அடுத்த மாதம் திறப்பு

136 0

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2-ம் கட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், விமான நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன், புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. விமான நிலைய பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளும் நிறைவடைய உள்ளதால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன், பார்வையாளர்களுக்காக, சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் இடம் பெறும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்படுகிறது. மேலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய வசதியாக 5 மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன

. இவற்றை பயன்படுத்த, அதற்கான பிரத்யேக செயலியில் உரிய கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் செயல்படத் தொடங்கியதும், தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய மக்கள் தொடர்வு மேலாளர் எல்.விஷ்ணுதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.