மட்டக்களப்பில் திருடப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளுடன் ஒருவர் கைது

139 0

மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டிகளை திருடிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை 07 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு அரசடிபகுதியில் உள்ள தனியார் கம்பனி ஒன்றிற்கு முன்னால் சம்பவ தினமான வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச் சக்கரவண்டியை ஒருவர் திருடும் போது அந்த தனியார் கம்பனி பணியாட்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் .

இதனையடுத்து குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்கடர் எம்.ஜீ.பி.எம்.எம். யேசூலி தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தினமும் காத்தான்குடியில் இருந்து பஸ்வண்டியில் பிரயாணித்து மட்டு நகருக்கு வந்து அங்கு வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துவிச்சக்கரவண்டிகளை திருடிக் கொண்டு சென்று அதனை காத்தான்குடி பிரதேசத்தில் 17 ஆயிரம் ரூபா தொடக்கம் 25 ஆயிரம் வரைவில் விற்பனை செய்துள்ளதாகவும்
சில துவிச்சக்கரவண்டிகளை கழற்றி பாகங்களாக விற்பனை செய்துள்ளதாகவும் போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் அதற்கு பணத் தேவைக்காக துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன் குறித்த நபரை இன்று 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துவிச்சக்கரவண்டிகளை திருட்டுக் கொடுத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று துவிச்சக்கரவண்டிகளை அடையாளம் காண்பித்து அதனை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.