வீட்டில் கணவன், இரு பிள்ளைகள் இருக்கும் போது அதிகாலையில் மர்மக்கொலை : கொலையாளியுடன் போராடிய கணவர்

174 0

பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிருவாக அதிகாரியான 42 வயது பெண் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (4) ; அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும், இரு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் அறையொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாகவும் புலஸ்திபுர பொலிஸார் கூறினர்.

இரு பிள்ளைகளின் தாயான  எம்.எல். யமுனா பத்மினி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடக்கும் போது, வீட்டுக்குள் குறித்த பெண்ணின் கணவரான பாடசாலை ஒன்றின் காவலரும், இரு பிள்ளைகளும் இருந்துள்ளதாகவும் இந் நிலையில் யாரால் எதற்காக குறித்த பிரதான நிருவாக அதிகாரி கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.கொலையாளியை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இருட்டுக்குள் கண்டுள்ளதாகவும், அவருடன் போராடியதாகவும் எனினும் சந்தேக நபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒஷான் ஹேவாவித்தாரணவின் மேற்பார்வையில் புலஸ்திபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ; பி.பி.கே. பத்திரண தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் இக்கொலை தொடர்பில் இன்று ( 4) மாலை வரை எவரும் கைது செய்யப்படவில்லை.