கட்சி தலைவர்கள் 4 பிரதான யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க ஒன்றினைய வேண்டும் – சம்பிக ரணவக்க

161 0

ராஜபக்ஷ குடும்பத்தை தவிர ஒட்டுமொத்த மக்களும் பெரும் அவல நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காணாவிடின் சமுக கட்டமைப்பில் இரத்த வெள்ளம் ஓடும் நிலை தோற்றம் பெறும்.பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் இவ்வார காலத்திற்குள் நான்கு பிரதான யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க ஒன்றினைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்காது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். நாட்டு நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள 43ஆவது படையணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்து சகல அரச தலைவர்களும்,அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும்,அரசாங்கங்களும் நாட்டுக்கு ஏதேனும் நன்மையினை செய்துள்ளார்களே தவிர ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை போன்று தீங்கிழமைக்கவில்லை.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் திறனற்ற அரசியல் நிர்வாகம் முழு நாட்டையும் இல்லாதொழித்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தை தவிர முழு நாட்டு மக்களும் பெரும் மோசமான அவலநிலையினை எதிர்கொண்டுள்ளார்கள்.அரச தலைவராக தலைமைத்துவம் வகிக்கும் தார்மீக உரிமை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும்,ராஜபக்ஷர்களுக்கு கிடையாது.69 இலட்க மக்களின் ஆதரவு தமக்கு உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.

நாடு மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.பொது கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.4 பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாரத்திற்குள் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

முதலாவதாக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் வாதபிரதிவாதங்கள் காணப்படுகின்றன.ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் 22ஆவது திருத்த வரைபில் காணப்படுகிறது,ஆகவே 22ஆவது வரைபு குறித்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக திருத்தத்தை செய்து வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.மாநாயக்க தேரர்களின் ஆலோசனைக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தின் பதவி காலம் 6மாத காலமாக வரையறுக்கப்பட்டு,உடன் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.கடன் மறுசீரமைப்பு பிற்போடப்பட்டுள்ளதால் இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

மூன்றாவதாக சர்வக்கட்சி அரசாங்கம் பொது கொள்கைக்கமைய ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

நான்காவது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.இவர பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.ஜனாதிபதி பதவி விலகியதும் பாராளுமன்றில் 24 மணித்தியாலத்திற்குள் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள முடியும்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சர்வதேசம் அங்கிகரிக்கவில்லை.

ராஜபக்ஷர்களின் குடும்பம் முழுமையாக அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும்.குறிப்பாக எரிபொருள் எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகிய கொள்வனவு விவகாரங்களில் இருந்து விலகியிருப்பது ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு செய்யும் மிகபெரிய உதவியாக அமையும்

முன்வைக்கப்பட்டுள்ள நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திமே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காண முடியும் என்றார்.