உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை அறிக்கையில் எஞ்சிய 87 தொகுதிகளை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன ? பேராயர் இல்லம் கேள்வி

141 0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் எஞ்சிய 87 தொகுதிகளை வெளியிடுவதால் பாராளுமன்றத்தின் சிறப்பு உரிமைகள் இழக்கக் கூடும் என்பதால் அவற்றை வெளியிட முடியாது என பாராளுமன்றம் தெரிவித்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் இடம்பெற்று தற்போது 38 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை குற்றவாளிகள் யார்? இதற்கு பின்புலத்திலிருந்து செயற்பட்டவர்கள் யார்? என்பன குறித்தும் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தாலும், பொலிஸாராலும் முடியாமல் போயுள்ளதாகவும் கொழும்பு பேராயர் இல்லம் அடிக்கடி கூறிவருகிறது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கொழும்பு பேராயர் இல்லம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியில் கடந்த 2021 மார்ச் முதலாம் திகதி வெளியிடப்பட்டிருந்த போதிலும், எஞ்சிய 87 தொகுதிகள் இதுவரை பொது வெளியில் வெளியிடப்படவில்லை. இவை பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவற்றை பொது வெளியில் வெளியிடுமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு விடுத்திருந்த எழுத்து மூலமான கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

மேலும், அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவற்றை பொது வெளியில் வழங்குவது பாராளுமன்ற சிறப்பு உரிமைகளை மீறும் செயலாகும் என சபாநாயகர் தெரிவித்தாக கொழும்பு பேராயர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.