ராஜபாளையத்தில் எலெக்ட்ரிக் கடையில் தீ விபத்து- ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

120 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சின்னசுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் பசும்பொன். இவர் அதே பகுதியில் பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென எலெக்ட்ரிக் கடையில் திடீரென தீப்பிடித்தது.

இதில் தீ மளமளவென்று பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின. கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது. தீப்பிடித்து எரிந்த கடைக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அவைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி விட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.