பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி கையெழுத்து பெற நடவடிக்கை: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

119 0

“பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நடவடிக்கை வவுனியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக” சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பைச் சேர்ந்த க.அருந்தவராசா (மேழிக்குமரன்) தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும் வவுனியா மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம் என்ற அடிப்படையில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சேதனை பசளையூடாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கூறி ஒட்டுமொத்தமாக உரங்களை நிறுத்தி வைத்திருந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து வரியைக் குறைக்கின்றோம் எனக் கூறி முன்னெடுத்த நடவடிக்கை திறைசேரியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாதிப்படைந்துள்ளார்கள். வவுனியாவில் கல்வி சமூகமும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வைத்தியசாலைகளில் முக்கிய மருந்துகள் இல்லாமையால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுடன் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் தொடர்பில் மக்கள் மிகப் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

எங்கும் ஒரே வரிசைகளாக காணப்படுகின்றது. தற்போது எரிபொருள், எரிவாயு என்பன நிறுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது. 10 வீதமான உணவுப் பொருட்களின் விலை மீள அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இது ஒரு மோசமான நிலைமைக்கு இலங்கையை கொண்டு செல்லப் போகிறது. பட்டினிச் சாவை எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்ந நிலையில் மக்கள் ஏதாவது பெறுவதற்கு நாம் ஆவண செய்ய வேண்டும்.

எமது வவுனியா மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரம் மக்களை இலக்காக கொண்டு அவர்களின் எதிர்ப்பை பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அணிதிரள செய்து கையெழுத்து வாங்கும் நடவடிக்கையை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம். புதன்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா இலுப்பையடியில் அந்த நிகழ்வு ஆரம்பமாகும்.

நாங்கள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், 20 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்களையும் தனித் தனியாக சந்தித்து அவர்களின் ஆதரவை கோரி வருகின்றோம்.

நாங்கள் எல்லோரும் இணைந்து 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்தை வாக்குகின்ற போது கிராமங்கள், நகரங்கள்தோறும் சென்று வாங்கவுள்ளோம். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள், பொது அமைப்புக்களிடமும் கையெழுத்தை வாங்கித் தருமாறு கோரியுள்ளோம். மக்களுடைய ஒட்டுமொத்த எதிர்ப்பை வவுனியாவில் இருந்து நாங்கள் காட்ட வேண்டும்.

இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது எமது கோரிக்கை. இந்த மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையில் சாதாரண தொழிலாளர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதில் இருந்து எல்லோரையும் காப்பாற்றும் வகையில் சமுதாய பண்ணை என்ற அடிப்படையில் 5, 6 பேரை சேர்த்து வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி நடத்தவுள்ளோம். இதில் அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் இணைத்து முன்னெடுக்கவுள்ளோம்.

25 ஆயிரம் பேரை நோக்கிய எமது இலக்கு முடிவடைந்து பின்னர் எமது வவுனியா மாவட்ட அரச அதிபர் ஊடாக அரசுக்கு வழங்குவதற்கும், இலங்கை தூதுவராலயங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கும், ஐ.நாவுக்கும் வழங்கவுள்ளோம். இணைந்து செயற்படும் அரசியல் கட்சிகள், அமைப்புக்களின் கடிதங்களையும் பெற்று வழங்கவுள்ளோம். இதற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களினதும் ஆதவைக் கோரி நின்கின்றோம்” எனத் தெரிவித்தார்.