கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல்- நீதிமன்ற உத்தரவு

116 0

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் கடந்த 23 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நபரொருவரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்(27) குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற வைத்தியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தங்களுடைய அயராத சேவைகளை சுகாதாரத்துறையினரும் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் செய்துவருகின்றனர்.

இருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் குழுவினரும், பதுக்கல் வியாபாரிகளும் இவ்வாறான அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியாதவாறு செயற்படுகின்றனர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.