சமூக நீதி பேசும் முதலமைச்சர், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி

191 0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: பா.ஜ.க.வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். பா.ஜ.க.வின் சிறப்பான சமூக நீதி கொள்கைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தமிழகத்தில் மக்களை குழப்பி வரும் செயல்பாட்டில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

சமூக நீதி பற்றி பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும்.

தமிழகத்தில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்கான கட்டமைப்புகளை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்று தெரிவித்தார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் தவறான வாக்குறுதிகளை அளித்து விட்டோம் என்று மக்கள் மத்தியில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.