ஹோமாகமயில் தீ விபத்து : தாய், தந்தை உயிரிழப்பு – பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

172 0

ஹோமாகம – மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் கீழ் பகுதியிலுள்ள அறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு , அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு குறித்த வீட்டின் அறை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் போது தீக்காயங்களுக்குள்ளான தந்தையும் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 47 வயதுடைய ஆண் ஒருவரும் 38 வயதுடைய பெண் ஒருவருவமாவர்.

காயமடைந்தவர்களில் நான்கு வயது சிறுவன் கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , சிறுவனின் சகோதரியான 19 வயது யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்று மாலை வரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.