சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான இடம் : பிரான்ஸ் நாட்டு பயண முகவர்களிடம் அமைச்சர் ஹரீன் தெரிவிப்பு

121 0

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், எனவே சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான இடம் என்றும் பிரான்ஸ் நாட்டுப் பயண முகவர்களிடம் உறுதியளித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, எனவே அந்நாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள இலங்கைத்தூதகரத்தினால் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கும் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பயண முகவர்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதற்கு இலங்கை பாதுகாப்பானதும், வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததும், இயற்கை அழகு நிரம்பியதும், தனித்துவமான பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டதுமான இடம் என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிரான்ஸ் நாட்டுப் பயண முகவர்களிடம் எடுத்துரைத்தார்.

எனவே இலங்கைக்கு சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் நாட்டு மக்களை ஊக்குவிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர், அவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்பவர்களுக்கு தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் இந்நாட்டின் பாராம்பரிய வரவேற்பு மற்றும் வாழ்க்கைமுறை என்பவற்றை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், எனவே சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான இடம் என்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.