அத்தியாவசிய ஊழியர்களுக்கு வெள்ளியன்று எரிபொருள்

154 0

எதிர்வரும் 3 நாட்களுக்கு (ஜூன் 20 முதல் 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 23 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை  தெரிவித்த அமைச்சர், எரிபொருளுக்காக நாட்டில் காணப்படும் நீண்ட வரிசைகள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாகவும் இதற்காக பொதுமக்களிடம் தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் போதியளவு டீசல் கையிருப்பில் இருப்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற போதும் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

10 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதால் தேவைக்கு அதிகமாகவே டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றும் இதனை பெற்றுக்கொள்வதற்கான காலத்தை முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

எரிபொருள் விநியோக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப சில காலம் எடுக்கும் என்று கூறிய அமைச்சர், இதற்காக வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் உள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 23 மற்றும் 24 திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ள பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், திருகோணமலை முனையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10,000 மெற்றிக் தொன் பெற்றோலைப் பயன்படுத்தி நாளாந்தம் மேலதிகமான பெற்றோலை சந்தைக்கு விநியோகிக்குமாறு லங்கா ஐஓசியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.