அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

142 0

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீகார், உ.பி ஆகிய மாவட்டங்களில் ரெயில்கள் எரிக்கப்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவத்தில் சேருவதற்காக விண்ணப்பித்திருக்கும் ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.