நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தென்கொரிய அரசு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் – தென் கொரிய தூதுவர்

159 0

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக தமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜீயோன்ங் வூன்ஜின் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்

அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள யூன் சுக் யேலோ மற்றும் அவரது கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையில் 45 ஆண்டு கால இராஜதந்திர தொடர்புகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி , தென் கொரிய அரசு இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தென் கொரியாவின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு தென் கொரியாவில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்குமாறும், தொழிற்துறை முதலீடுகளை ஊக்குவிக்குமதறும் ஜனாதிபதி இதன் போது கேட்டுக் கொண்டார்.