எடப்பாடி பழனிசாமியுடன் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

178 0

அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோஷம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:- பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்.

14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி உடன்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. என்னை தொண்டர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இந்த விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள் என்றார்.