கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

140 0

இன்றைய நவீன காலத்தில், சமூக வலைதளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் பள்ளி பருவத்திலேயே, பருவக் கோளாறால் பலரும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து, வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

கோவை மாவட்டத்தில், 2019-2020-ம் ஆண்டு வரை குழந்தை திருமணங்கள் 100-க்கும் குறைவாக இருந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு 2021-ம் ஆண்டு 146, நடப்பாண்டு மே மாதம் வரை 46 என 192 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பதின் பருவத்தில் ஏற்படும் காதல், குடும்பங்களின் வறுமை, பெற்றோர் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளே பெரும்பாலும் குழந்தை திருமணங்களில் சிக்கி கொள்கின்றனர். இதில், பெற்றோர் செய்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் செய்தவர்களே அதிகம். திருமணத்திற்கு முன்பே உறவு வைத்து கொண்டு திருமணம் செய்த வேதனைக்குரிய சம்பவங்களும் உள்ளன. 2021-ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பாண்டில் 46 திருமணங்கள் நடந்துள்ளன.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றத்துக்கு 2 முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டணை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவிகள் மட்டுமல்லாது, மாணவர்களிடமும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.