வெற்று மிரட்டல்களால் பலனில்லை தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் ‘சாதி வெறுப்பை விதைக்க முயல்வதா?’

179 0

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை வயதில் இளையவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவராகவும் இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சித்து இருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து காலம் கடத்தி கொண்டிருக்கின்றீர்கள்.

இரண்டு நாட்களில் இரண்டு லாக்-அப் மரணங்கள். காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. கடந்த ஒரு வருடத்தில் 7 லாக்-அப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.