பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்- தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

208 0

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் இடைநிற்றலை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தனார்.

பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள், உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி உயர்கல்வி படிப்பில் சேருவதை உறுதி செய்திடவேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார். பழங்குடியினர் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கை முறையில் சமையலறை தோட்டம் அமைத்து உணவுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட அறிவுறுத்தப்பட்டது. மாணாவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி விளையாட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டுவரவும் அறிவுரை வழங்கினார்.