மட்டக்களப்பில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

185 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் தங்களது தாய் தாக்கப்பட்டமையை கண்டித்தும் பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று (11) பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உறவினர்கள் நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சனிக்கிழமை  காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தந்தையுடன் வந்த பிள்ளைகள் மூவர் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

வீடு புகுந்து தாக்கியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.’ ‘வாழைச்சேனை பொலிஸார் ஒரு பக்கச் சார்பாக நடப்பது ஏன்.’ ‘எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும் ‘ என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த புதன் கிழமையன்று பதுரியா வீதி பிறைந்துறைச்சேனையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற பிணக்கானது கைகலப்பாக மாறியதினால் உதுமாலெப்வை றிசானா வயது (36) என்ற குடும்பப் பெண் தலையில் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தும் சந்தேக நபர்களுக்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காது நாட்களை கழித்ததினால் நீதி வேண்டி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் இவர்களுக்கு ஆதரவாக ஒன்று கூடினர்.

குறித்த நிலவரத்தினை அறிந்து கொண்ட பொலிஸார் ஓன்று கூடியவர்களை கலைந்து செல்லுமாறு பணித்து போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

சந்தேக நபர்களை கைது செய்தால் மாத்திரமே  தமது போராட்டத்தினை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் பதில் தெரிவித்தனர்.

நிலமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதனை தொடர்ந்து ; கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.