புதிதாக திறக்கப்பட்ட பாலம் அறுந்து தொப்பென்று நீரோடையில் விழுந்த மக்கள்- 8 பேருக்கு எலும்பு முறிவு

158 0

மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார். இந்த தொங்கு பாலம், மர பலகைகள் மற்றும் உலோக சங்கிலிகளால் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

மேயரால் பாலம் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது.

இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்த சம்பவம் மேயர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.