சுசீந்திரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

203 0

சுசீந்திரம் அருகே தேருர் சங்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 55), முன்னாள் ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணமாகி விட்டது. ஜெயபிரசாத் தற்பொழுது வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படும் வாகனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் ஜெயபிரசாத் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக தயாரானார்.

அவரது மனைவி சாந்தி வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தார். திடீரென படுக்கை அறையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து சாந்தி அங்கு சென்று பார்த்த போது ஜெயபிரசாத் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பின்னர் இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

ஜெயபிரசாத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. படுக்கை அறையில் பிணமாக கிடந்த ஜெயபிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபிரசாத் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.