கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அரிய வகை வாழை மரங்கள்

175 0

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுசூழல் பூங்கா வளாகத்தில் 20 அரிய வகையான வாழைக்கன்று களை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நட்டு வைத்தார். இந்த வாழை மரங்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் உடனடியாக தோட்டக்கலை துறையினருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அழியும் தருவாயிலுள்ள சுமார் 31 ரக வாழை ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்டன.

20 வாழை ரக கன்றுகள் நடும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கி வைத்தேன். நடவு செய்யப்பட்ட வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பல இனங்கள் நன்றாக வளர்ந்திருப்பதோடு பல வாழை மரங்களில் வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளை கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள் சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.