20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4ஆவது தடுப்பூசி!

191 0

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸை இன்று (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி மையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குருகே கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மூன்றாவது தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தங்களின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி டோஸ்களை காலை 9:00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பெறுவதற்காக புதிய பஸார் மகப்பேறு இல்லம், டீன்ஸ் வீதியில் உள்ள MOH அலுவலகம் மற்றும் வெள்ளவத்தையில் உள்ள MOH அலுவலகம் ஆகியவற்றிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்தோடு, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விஹார மகாதேவி பூங்காவில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் நான்காவது டோஸ் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாட்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.