இலங்கையில் முதலாவது வீதி நூலகம்

219 0

கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரே “ரேஸ் கோர்ஸ்” வாகனத்தரிப்பிடத்திற்கு அருகாமையில் இலவச வீதி நூலகம் (Street Library) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது,

இதுவே இலங்கையின் முதலாவது வீதி நூலகமாகும். குறித்த வீதி நூலகம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 2.3 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களின் கூட்டு முயற்சியான இந்த நூலகத் திட்டம் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கி  தலைமையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நட்புறவை மேலும் வலுப்படுத்துதன் நிமித்தமே இந்த நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் காணப்படுகின்றன

இந்நூலகம் ஏனைய நூலகங்களை விட வித்தியாசமானது. “புத்தகம் ஒன்றை வைத்து விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்தல்” என்ற அடிப்படையில் இந்நூலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே நூலகர் என்று யாரும் இல்லை. எவரும் இங்கு வந்து புத்தகங்களைப் படிக்கலாம். மேலும், வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் விருப்பப்படி வேறு புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்