அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

202 0

அமெரிக்காவில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணம், பிலடெல் பியா நகரில் உள்ள தெற்கு வீதி இரவு பொழுதுபோக்குக்கு பெயர்போனது. வார இறுதி நாட்களில் அப்பகுதியில் மக்கள் கூட்டம்அதிக அளவில் இருக்கும். சனிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு அங்கு கூடியிருந்த மக்கள்மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை ஆய்வாளர் டி.எப்.பேஸ் கூறும்போது, “வார இறுதி நாட்களில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதும், அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்கள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 2 துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, டெக்சாஸ் பள்ளிக்கூடம், கலிபோர்னியாவின் தேவாலயம், நியூயார்க்கின் மளிகை கடை, ஆக்லஹாமாவின் மருத்துவமனை ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.