கீழ்ப்பாக்கத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு ஜெயில்

183 0

கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமூர்த்தி (56) கைது செய்யப்பட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாகமூர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

இதற்கிடையே கீழ்ப்பாக்கம் பகுதியில் மாயமான சிறுமியை மீட்டு அவரை அழைத்துச் சென்ற திலீப்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் திலீப்குமார் என்பவர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி வேலுருக்கு அழைத்துச் சென்று, பாலியல் உறவு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீலிப்குமார் கைது செய்யப்பட்டார்.