வவுனியா ஊடக அமையத்திற்கு தகுதியற்ற ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டு நீதிமன்றம் வரை சென்று வழக்கு விசாரணைகளுக்கு உட்பட்டுள்ள ஒருவரை வவுனியா ஊடக அமையத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதற்கு தமது கண்டனங்களை தெரிவிப்பதாகவும், மாற்று மதத்தினை மதிக்கத் தெரியாத ஒருவரே ஊடக அமையத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் என்பன கூட்டாக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் ,அல் இக்பால் விளையாட்டுக்கழகம் , வேப்பங்குளம் , பட்டக்காடு , பட்டாணிச்சூர் ஆகிய பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் சங்கம் ஆகியவற்றால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பக்கச்சார்பற்ற தலைவரை நியமிக்குமாறு கோரிக்கை
மூத்த ஊடகவியலாளர்கள், பக்கார்பற்ற ஊடகவியலாளர்கள் பணியாற்றும் வவுனியா ஊடக அமையத்தில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளையும், பிரிவினைகளையும் தோற்றுவித்து பல்வேறு ஆதாரமற்ற சமூக குற்றச்சாட்டுக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவரை ஊடக அமையத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகவும், மன வேதனையுடனும் கண்டனம் தெரிவிக்கின்றோம்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எமது அமைப்புக்கள் மீது முன்வைத்து அதற்கு எதிராக நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளையும், சமூகப்பிரச்சினைகளையும் தோற்றுவித்த குற்றச்சாட்டில் வழக்கு நீதிமன்றத்தில் இம்மாதம் 16 ஆம் திகதி தவணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான ஒருவரை ஊடக அமையத்தின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன என்பது எமக்குப் புரியவில்லை . இவ்வாறு சமூகங்களுக்கு எதிரானவர்களை தவிர்த்துவிட்டு நடுநிலைமையுடன், பக்கச்சார்பற்ற நிலையில் பணியாற்றும் தலைவர் ஒருவரை, நிர்வாகத்திலுள்ளவர்களை நியமிப்பதுடன் இனங்களுடன், ஒற்றுமையுடன் பணியாற்ற முன்வருமாறும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.