சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

296 0

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,

சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம், காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் அகிம்சை ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றது.

காணாமல் போன தமது உறவுகளை தேடி அலைந்து, இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடியுங்கள் என வலியுத்தி பாரிய உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

காணாமல் போனோர் வெளிநாடு சென்றிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து எமது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இது ஒரு நாட்டின் பிரதமர் கூறக்கூடிய கருத்து அல்ல. பிரதமர் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும். பிரதமரின் இந்த கருத்து நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறதா? வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்றால் பிரதமரா அனுப்பி வைத்தார் என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.