மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெடி பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்யுமாறு அமைச்சர் இதன்போது பாதுகாப்பு படையினரிடம் கேட்டுள்ளார்.
மீனவர்கள் மின் பிடிப்பதற்காக அதிகளவில் வெடிபொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் கடற்றொழில் அமைச்சுக்கு முறைபாடுகள் கிடைத்துள்ளன.
டைனமைட் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்று மீனவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சில மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் மீன்வளம் அழிவுக்குள்ளாகும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது. இதனால் இலங்கையின் கடற்பரப்பில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை சந்தைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.