ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணை மூன்று அமைச்சர்கள் பிறப்பிப்பு – நளின் பண்டார |

320 0

ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று  அமைச்சர்கள் பிறப்பித்துள்ளார்கள் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று (22) ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரம்புக்கனை சம்பவத்தில் மூன்று மெகசின்  ஊடான 90 துப்பாக்கி தோட்டாக்கல் பாவிக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முன்தினம் பொலிஸ்மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற சந்திப்பில் போராட்டங்களில் ஈடுப்படுபவர்களை கைது செய்ய வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டு அது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்நாயக்க துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளார். ராஜபக்‌ஷர்களின் ஆதரவுடன் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுக்களும் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை பிரயோகிக்க பொலிஸ்மா அதிபர் உட்பட சிரேஷ்ட தரப்பினர் எவரும் அனுமதி வழங்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டை பிரயோகிக்குமாறு இவருக்கு  அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட மூன்று இராஜாங்க அமைச்சர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்பதை பொறுப்புடன் குறிப்பிடுகிறேன்.

கோகாலை, அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்ட அமைச்சர்களே துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.