இந்தியா மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும்

173 0

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உணவுப்பொதிகள் வழங்க முன் வந்திருப்பதை தான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் சுப்பையா சதாசிவம், அந்த உணவுப்பொதிகளை உண்ணுவதற்கு இந்தியவம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வேண்டும். உணவு பொதிகள் வழங்குவது போல அதைவிட மிகவும் முக்கியமாக மருந்து வகைகளையும் வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்திய தொப்புள்கொடி உறவு என கூறப்படும் இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு போதிய சுகாதார வசதியில்லாமலும் வேலைக்கேற்ற ஊதியமும் இல்லாமலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பல பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற போதிலும் சுகாதார வைத்திய சேவைகளைஅரசாங்கம் முறையாக செய்து கொடுக்கவில்லை.

பெருந்தோட்டத்தொழிலாளர் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு தோட்ட வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெறமுடியாமல் நகரப்பகுதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளை நாடவேண்டியுள்ளது.

தற்பொழுது நாட்டில் நிலவும் டொலர் தட்டுபாடு,எரிப்பொருள் தட்டுபாடு மற்றும் பொருளாதார பிரச்சினை,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தற்பொழுது மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

எனவே, தமிழக முதல்வர் மருந்து வகைகளையும் இலங்கைக்கு வழங்கினால் இந்த நாட்டின் தற்பொழுது நிலவும் இக்கட்டான சூழ்நிலைக்கு பெரிய உதவியாக இருக்கும். அத்தோடு பல உயிர்களையும் காப்பாற்றிய பெருமையும் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.