நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு தீர்மானித்தேன். இதனை தவறான கோணத்தில் விமர்சிப்பவர்கள் எனது இல்லத்தை முற்றுகையிட்டமை கவலைக்குரியது என்று விவசாய இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார கண்ணீருடன் தெரிவித்தார்.
புத்தாண்டு தினத்தில் அவரது இல்லத்தினை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மனசாட்சியின் அடிப்படையிலேயே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன்.
18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லும் போது , நாட்டில் அமைச்சரவை ஒன்று இல்லை என்றால் எவ்வாறு எமது நிலைப்பாடுகளை முன்வைப்பது? எமது நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதாகவும் , அதனை தொடர்ந்தும் பேணுவதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோருவது?
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு எவரும் முன்வராவிட்டால் , பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தை வேறு குறுகிய நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டது என்று எவரேனும் கூறுவார்களாயின் , அது பாரிய குற்றமாகும்.
ஒரு சிலர் நான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் வலுவடைந்து விடும் என்ற அச்சத்திலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கட்சி தாவியவர்கள் அவர்களைப் போன்றே என்னையும் எண்ணுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியது.
குறிப்பிட்ட சிலர் மதுபோதையுடன் எனது இல்லத்திற்கு முன்னாள் குழு , தகாத வார்த்தை பிரயோகங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனக்கு சிறிய குழந்தையொன்று இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தினார் அவர் நாள் முழுவதும் உணவு உண்ணவில்லை
<p>இவ்வாறான அவலட்சணமான அரசியலை ஒழிப்பதற்கு பெரும்பாலான நாட்டு மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் என்னை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நான் வேறு எந்த கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக் கொள்ளவில்லை.
தொடர்ந்தும் சு.க. உறுப்பினராகவே செயற்படுகின்றேன். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளேன் என்றார்.