பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த மகன்கள்- மண்ணை தின்று உயிர் வாழ்ந்த மூதாட்டி

167 0

தஞ்சாவூர் அருகே மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த சித்திரவதைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சை காவிரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி (வயது 62). இவரின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரும், மகள் ஒருவரும் இறந்து விட்டனர்.

தற்போது இவரது மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் தொலைகாட்சி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் இவர்களது குடும்பத்தினர் தஞ்சையில் தான் வசித்து வருகின்றனர்.
சொத்து பிரச்சினையால் இரு மகன்களும் ஞானஜோதியை கவனிக்காமல் கைவிட்டனர். மேலும் அவரை ஒரு வீட்டில் வைத்து பூட்டி உள்ளனர். தொடர்ந்து வெளி உலகமே தெரியாமல் இருளில் வசித்ததால் ஞானஜோதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. உண்ண உணவு இல்லாமலும், கவனிக்க ஆள் இல்லாமலும் அனைத்து வித கஷ்டங்களும் பட்டு தான் ஞானஜோதி வாழ்ந்து வந்தார்.
சில நேரங்களில் அவரது மகன்கள் பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்தனர். மற்றப்படி பெற்ற தாயை இரு மகன்களும் அருகில் இருந்து கவனிக்காமலும், உணவு கூட கொடுக்காமலும் வீட்டுக்குள் பூட்டி விட்டனர். இதனால் பல நேரங்களில் உணவு இல்லாமல் மூதாட்டி ஞானஜோதி வீட்டின் தரையை நோண்டி மண்ணை எடுத்து தின்ன ஆரம்பித்தார். இதனால் எலும்பும் தோலுமாக மாறி விட்டார்.
அருகில் வசிப்பவர்கள் சிலர் ஜன்னல் வழியாக உணவு கொடுத்து வந்தனர். இதனை அறிந்த மகன்கள் அதையும் தடுத்து விட்டனர்.
இதனை கண்டு மனம் நொந்த ஜெயச்சந்திரன் என்பவர் இதனை செல்போனில் வீடியோ எடுத்து தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பினார். மேலும் இந்த பரிதாப வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மூதாட்டியை மீட்கும் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.
அதன்படி அவர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்து ஞானஜோதியை மீட்டு வாருங்கள் என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சமூக நலத்துறை சம்பவ இடத்துக்கு சென்றது. அப்போது அங்கு வந்த மூத்த மகன் சண்முகசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே அவரை பெற்ற தாயை கவனிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவது முறையா? என சமூகநலத்துறையினர் கண்டித்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று அங்கு பரிதாப நிலையில் இருந்த ஞானஜோதியை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஞானஜோதியை முதியோர் இல்லத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தஞ்சை மக்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது.