லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்த ரஷிய போர்க்கப்பல்

144 0

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 51-வது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்தியம் மீது உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

15.04.2022
 
05.50: உக்ரைனில் ரஷிய படையெடுப்பு தொடங்கியது முதல் கார்கிவ் பகுதியில் குறைந்தது 503 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர்  ஓலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 24 பேர் குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்கிவ் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியப் படைகள் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சினெகுபோவ் குறிப்பிட்டுள்ளார்.
04.40: உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு ஏற்படும் பின்னடைவு,  குறைந்த பாதிப்புள்ள அணு ஆயுதங்களை ரஷிய அதிபர் புதின் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அமெரிக்காவின் சிஐஏ  இயக்குநர் எச்சரித்துள்ளார்.
03.30: உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர் கப்பல் சேதம் அடைந்து தீப்பிடித்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.  ஒடேசாவிற்கு தெற்கே 60 முதல் 65 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தீப்பிழம்புடன் காணப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். சேதமடைந்த மாஸ்க்வா ஏவுகணை கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷிய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.  போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அதில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்ததாகவும், எனினும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் ரஷியா குறிப்பிட்டுள்ளது.
02.10:  ரஷியாவின்  பிரையன்ஸ்க் பிராந்தியம் மீது உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
01.30: உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என்று சொல்வதை  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறித்து பேசிய மக்ரோன், அந்த வார்த்தை அரசியல்வாதிகளால் அல்ல, சட்ட வல்லுநர்களால் உச்சரிக்கப்பட வேண்டும் என கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதாகவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எல்லாவற்றையும் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
14.4.2022
21.50: ரஷிய ஆக்ரமிப்பிற்கு எதிரான உக்ரைன் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், அயர்லாந்து வெளியுறவு மந்திரி சைமன் கோவேனி கீவ் நகருக்கு சென்றுள்ளார். உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை கோவேனி சந்தித்துள்ளதாக அயர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
21.10: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தனது  தூதரகத்தை விவில் நகரில் இருந்து கீவ்விற்கு மீண்டும் இடமாற்றம் செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் பிரதிநிதியுடன், பிரான்ஸ் வெளியுறவு மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து தூதரக இடமாற்றம் குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
05.50: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும், கீவ் நகருக்கு வந்து ஆதரவு தெரிவித்த நேட்டோ நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
02.45: ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றின் அதிபர்களான ஆண்ட்ர்செஜ் துடா, கிடானஸ் நவ்சேடா, எகிலிஸ் லெவிட்ஸ், அலார் காரிஸ் ஆகியோர் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
00.15: உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது.
ஏற்கனவே உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.