வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து, மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வேப்பங்குளம் 6ஆம் வீதியில் உள்ள 10 குடும்பங்களின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் அக்குடும்பங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் திருநாவற்குளம் பகுதியிலும் சில வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
மன்னார் வீதியிலிருந்து பூங்கா வீதிக்குச் செல்லும் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குருமன்காடு காளி கோவில் சுற்றுவட்ட வீதியிலுள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளன.
எனினும் இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வயல் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
நேற்று இரவு ஆரம்பமான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்றி காணப்படுவதாகவும், பொதுமக்கள் குறைந்தளவில் வவுனியா நகரம் காட்சியளிப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.