எரிபொருள் நிரப்பு நிலைய கொள்ளை – மேலும் இருவர் கைது

133 0
நாவல, நுகேகொட வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதாக கூறி அங்கிருந்த ஊழியர்களிடம் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் மறைந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான சொத்தி உபாலியின் மகனும் ஒரு அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கூரிய ஆயுதங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை தாக்கி 250,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து 10,000 ரூபாய் பணம், 10 கிராம் போதைப்பொருள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் நான்கு வாள்களுடன் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்தனர்.

பொரளை மற்றும் கொழும்பு 8 பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 27 மற்றும் 29 வயதுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.