மாணவனொருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் விவகாரம் : முன் பிணை கோரியுள்ள ஆசிரியை

140 0

நான்கு வருடங்களாக பாடசாலை மாணவனொருவனை பாலியல் நடவடிக்கைககளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலையொன்றின் கணினி ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாசிரியை முன் பிணைக் கோரி மனுத் தாக்கல்ச் செய்துள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் அவர் இந்த முன் பிணை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில்,  அம்மனு தொடர்பில் விளக்கமளிக்க விடயம் தொடர்பில் விசாரணைக்ளை முன்னெடுக்கும்   பி.சி.டப்ளியூ.பீ. எனப்படும் பொலிஸ் சிறுவர், மகளிர்  பணியகத்துக்கு நீதிமன்றம் நேற்று (22) அறிவித்தல் அனுப்பியது.

சந்தேக  நபராக கருதப்படும்  ஆசிரியை சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண முன் வைத்துள்ள  இந்த முன் பிணை கோரும் மனு தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க  பொலிஸாருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 வயதான குறித்த விவகாரத்தில் மாணவனாக அறியப்படும் நபர்,  தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், இதற்காக அந்த இளைஞன் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாகவும் முன் பிணை மனுவில் ஆசிரியை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல் முறைப்பாட்டை தானே பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர்  விசாரணை பணியகத்துக்கு கையளித்ததாகவும், அவ்வாறான பின்னணியில் இந்த சம்பவத்தால் தானும் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பு என சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர், விசாரணைகளில் தான் கைது செய்யப்படுமிடத்து தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு முன் பிணை மனுவூடாக கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  கடந்த 10 ஆம் திகதி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

20வயதுடைய இளைஞர்  மாணவராக இருந்த போது சந்தேக நபரான ஆசிரியையை கிரிக்கெட் சமர் (பிட்மெச்)ஒன்றின் போது  அவரை சந்தித்துள்ளார்.அதன்பின்னர் அவரை 60 தடவைகள் கல்கிஸ்சை பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு இந்த ஆசிரியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பிலும் பாடசாலைக்குள்ளே நடந்த துஷ்பிரயோகங்கள்  தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது குறித்த ஆசிரியை முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.