நாஜி முகாமில் இருந்து தப்பி, ரஷியாவால் கொல்லப்பட்டவருக்கு ஜெர்மன் பாராளுமன்றம் அஞ்சலி

210 0

புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ் டோரா, பெர்கன் பெல்சன் ஆகிய 4 நாஜி முகாம்களில் இருந்து தப்பியவர் போரிஸ் ரோமன்சென்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷிய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் கார்கீவ் பகுதியில் வசித்து வந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ (96). கடந்த வெள்ளிக்கிழமை ரஷிய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார் என உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கார்கீவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர், கடந்த வெள்ளி கிழமை அன்று ரஷிய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்ததில் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பி, ரஷிய தாக்குதலில் உயிரிழந்த போரிஸ் ரோமன்சென்கோவுக்கு ஜெர்மனி நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவரது மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.