உக்ரைன் விவகாரம் – ஐ.நா.சபையின் அவசரகால சிறப்பு அமர்வு நாளை கூடுகிறது

169 0

ஐக்கிய நாடுகள் அமைப்பில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷியா 27வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷியப் படை  விடுத்த எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் நிராகரித்தனர். ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு உக்ரைன் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு நாளை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 22 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தை தொடர்ந்து, ஐ.நா. சபையின் அவசரகால சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.