இரு ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடி

184 0

நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மக்களின் பரிதவிப்புகளை பிரதிபலித்து தனது  தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்த பெண் அறிவிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ரூபவாஹினியில் பல்வேறு சிங்கள நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபலமான அறிவிப்பாளர் பரமி நிலேப்தா ரணசிங்ஹவே இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை விமர்சிக்கும் பதிவொன்றை தனது தனிப்பட்ட பேஸ்புக்கில் பகிர்ந்தமைக்காக தொலைக்காட்சி தொகுப்பாளினி இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தன்னைப் பணி நீக்கியமை தொடர்பாக பரமி நிலேப்தா ரணசிங்ஹ அவரது முகநூல் பக்கத்தில் ‘ஒரு குடிமகன் என்ற ரீதியில் எனது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது சமூகப் பொறுப்பாக எனது நலனையும் துயரத்தையும் பற்றி விசாரிப்பவர்களுக்காக நான் இந்தக் குறிப்பை இடுகிறேன்.

நான் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்வு குறித்து உணர்திறன் கொண்டிருப்பதால் இன்று முதல் தொலைக்காட்சி வளாகம் எனக்கு தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது.

இது ஒரு நிறுத்தம் இல்லை ஒரு திருப்பம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர் ராகுல் சமந்தவை கடமையை செய்ய விடாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

இதனால், ஊடக சுதந்திரத்தை அடக்கியாள ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமளிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.